தமிழக சிற்றரசர்கள்-02
மலையமான்கள்:
இலக்கியத்தில் மலையமான்கள்:
மலையமான்களில் முதல் மன்னனாகவும், தலைசிறந்தவராகவும் அறியப்படுபவர் திருமுடிக்காரி.மூவேந்தர்களைப் போல முடியணிந்ததால் "திருமுடிக்காரி" என இவர் பெயர் பெற்றார். கடையேழு வள்ளல்களில் ஒருவராய் இவர் போற்றப்படுகிறார்.
"காரி யூர்ந்து பேரமர் கடந்த
மாரி யீகை மறப்போர் மலையன்" என புறநானூறு சிறப்பித்து கூறுகிறது. இவனது குதிரைக்கும் காரி என்றே பெயர். குதிரை வடிவில் இவர் காசு அச்சடித்துள்ளார். இக்காசுகள் திருக்கோவிலூர் சுற்றுவட்டார ஆற்றங்கரைகளில் நிறைய கிடைத்துள்ளது. திருக்கோவிலூரை தலைமையிடமாய் கொண்டு இவர் அரசு புரிந்தார் என்பதனை,
"துஞ்சாமுழவின் கோவற் கோமான் நெடுந்தேர்க் காரி" என்ற அகநானூற்று பாடல் ஒன்றின் வாயிலாய் அறியலாம். இவனது வள்ளல்தன்மை குறித்து நிறைய பாடல் புறநானூற்றில் வருகிறது. முள்ளூரில் பெய்யும் மழையின் துளிகளை விட தன்னை புகழ்ந்து பாடும் புலவர்களுக்கு இவன் நிறைய தேர்களை அளித்தான் என புறநானூறு கூறுகிறது.
“நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குவர் அல்லர் நெறிகொளப்
பாடு ஆன்று இரங்கும் அருவிப்
பீடுகெழு மலையற் பாடியோரே"
நாள், நேரம் பார்த்து காரி கொடையளிப்பதில்லை, அவனிடம் சென்றாலே வாரி வழங்குவான் கபிலர் காரியின் கொடைத்தன்மையை புகழ்கிறார்.
மூவேந்தர்களில் காரி எவன் பக்கம் இருக்கிறாரோ அவரே பெற்றிபெறுவர் என சங்க இலக்கியங்கள் இவரை புகழ்ந்து பாடுகிறது.
“குன்றத்து அன்ன களிறு பெயரக்
கடந்துஅட்டு வென்றோனும் நிற்கூ றும்மே
வெலீஇயோன் இவன் எனக்
கழல்அணிப் பொலிந்த சேவடி நிலம்கவர்பு
விரைந்துவந்து சமம் தாங்கிய
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
நல்அமர் கடத்தல் எளிதுமன் நமக்குஎனத்
தோற்றோன் தானும் நிற்கூறும்மே”
(புறநானூறு, 125)
திருமுடிக்காரி சோழனுக்குப் போர் உதவி புரிந்திருக்கிறான். ஒருமுறை சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவனும், சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் போர் புரிந்தனர். இவர்கள் இருவரில் சோழனுக்குச் சார்பாய் காரி நின்று வெற்றியைப் பெற்றுத் தந்தான். பின்னொரு சமயம் சேரனுக்கும் உதவிபுரிந்து சோழனை தோற்கடித்துள்ளான். இதிலிருந்து வேளிர் குடிகளில் மலையமான்கள் வலிமை பொருந்திய படைபலம் மிக்கவர்கள் என அறியலாம். ஆநிரை கவரும் வெட்சிபோரில் தலைமையேற்று குழுவாய் சென்று, கவர்ந்த ஆநிரைகளை தம் மக்களுக்கு பங்கிட்டு கொடுத்துள்ளான் திருமுடிக்காரி.
சக வேளிருடன் போர்:
திருமுடிக்காரி தன் சக வேளிர் இனத்தவருடன் பகைமை ஏற்ப்பட்டு போரிட்டுள்ளான், ஏழு வள்ளல்களில் ஒருவனான, கொல்லிமலைப்பகுதி அரசனான 'வல்வில் ஓரி' யுடன் போரிட்டு, அவனைக்கொன்று அவனது நகரிலேயே வீறுகொண்டு நடந்து வந்ததை,
.
"ஓரிக்கொன்ற ஒருபெருந் தெருவிற்
காரி புக்க நேரார் புலம்போல்"
என்ற நற்றிணை பாடலில் கபிலர் பாடுகிறார். இந்நிகழ்வினால் திருமுடிக்காரி "கொல்லிமலை பொருளன்" எனும் சிறப்புப் பெயர் பெற்றான். சக வேளிர்களின் பகைமையை சம்பாதித்த திருமுடிக்காரி இறுதியில் அதியமானின் தகடூரை தாக்கி அளித்தான். வெஞ்சினம் கொண்ட அதியன் பிரிதொரு சமயம், தன்படையோடு திருக்கோவிலூரை தாக்கி பெருஞ்சேதப்படுத்தினான். இப்போருக்குப்பின் திருமுடிக்காரி குறித்த பாடல் ஏதும் கிடைக்கவில்லை. ஒருங்கால் இப்போரில் அவன் இறந்திருக்கக்கூடும்.
திருமுடிக்காரியின் மகன்:
திருமுடிக்காரியின் மறைவுக்குப்பின் அவனது மகன் "மலையமான் சோழிய ஏனாதி திருக்கன்னன்" என்பவன் அரசனாகிறான், போரில் தோற்ற சோழன் ஒருவனை தனக்குரிய முள்ளூரில் வைத்து பாதுகாத்தவன் திருக்கன்னன் என இவனது வீரத்தினை புறநானூறு கூறுகிறது.
பறம்பு நாட்டை ஆண்ட பாரி, குறுநில மன்னன்.கடையெழு வள்ளல்களில் ஒருவன்,முல்லைக்கொடி ஒன்று பற்றிக் கொள்ளக் கொம்பு இல்லாது வாடுவது கண்டு தன் தேரை அதற்குக் கொடுத்தவன். கபிலர் சங்கப் புலவருள் புகழ் மிக்கவர். பாரியோடு நீண்ட காலம் உடன் வாழ்ந்து நட்புச் கொண்டவர். மூவேந்தர்களும் கூட்டணியமைத்து பாரியை போரில் கொன்றனர்.பாரி இறந்தபின், பாரியின் மகளிரான அங்கவை, சங்கவையை அழைத்துக் கொண்டு வேறு நாடு சென்று வேளிர்களிடம் அப்பெண்களை மணமுடிக்க வேண்டினார், மூவேந்தரின் பகைமை இதனால் வரும் என அஞ்சி அவர்கள் மறுக்க இறுதியில் திருக்கோவிலூர் வந்தடைந்து அன்றைய மலையமானிடம் இப்பெண்களை ஒப்படைத்துவிட்டு, பின் நண்பனை எண்ணி உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டார் என கூறுவர். இச்செய்திக்குரிய இலக்கியம் நமக்கு கிடைக்காவிடினும், பிற்கால சோழரான ராஜராஜப்பெருவேந்தன் கல்வெட்டு இச்செய்தியை கூறுகிறது. கபிலர் காலத்தில் வாழ்ந்த திருக்கன்னன் அந்த இரு பெண்களுக்கும் புகழிடம் கொடுத்த மலையமானாய் இருக்க வாய்ப்புள்ளது.
இராஜராஜனின் தாய் மலையமான் குடியை சார்ந்தவர் என்பதும், அவர் சுந்தரசோழர் இறந்ததும் உன்கட்டை ஏறியிறந்தார் என்பதனயும் மேலும் கபிலர்பற்றிய குறிப்பும் கீழ்க்கண்ட பாடல்வடிவ கல்வெட்டின் மூலம் அறியலாம்.
(தண்டமிழ் நாடன் சண்டப ராக்கிரமன்
றிண்டிறற் கண்டன் செம்பியர் பெருமான்
செந்திரு மடந்தைமன் ஸரீராச ராசன்
இந்திர சேனன் ராஜசர் வஞ்ஞ னெனும்
புலியைப் பயந்த பொன்மான் கலியைக் - - - - - -
கரந்து கரவாக் காரிகை சுரந்த
முலைமிகப் பிரிந்து முழங்கெரி நடுவணுந்
தலைமகற் பிரியாத் தைய்யல் நிலைபெறும்
தூண்டா விளக்கு..............
........ ......... .......சி சொல்லிய - - - - - - - - - - -
வரைசர்தம் பெருமா னதுலனெம் பெருமான்
பரைசைவண் களிற்றுப் பூழியன் விரைசெயு
மாதவித் தொங்கல் மணிமுடி வளவன்
சுந்தர சோழன் மந்தர தாரன்
திருப்புய முயங்குந் தேவி விருப்புடன் - - - - - - -
வந்துதித் தருளிய மலையர் திருக்குலத்
தோரன் மையாக தமரகத் தொன்மையிற்
குலதெய்வ ........ கொண்டது நலமிகுங்
கவசந் தொடுத்த கவின்கொளக் கதிர்நுதித்
துவசந் தொடுத்த சுதைமதிற் சூழகழ்ப் - - - -
புளகப் புதவக் களகக் கோபுர
வாயின் மாட மாளிகை வீதித்
தேசாந் தன்மைத் தென்திருக் கோவலூ
ரிசரந் தன்றக் கவன்றது மிசரங்
குடக்குக் கலுழி குணக்கு கால்பழுங்கக் - - - - -
காளா கருவுங் கமழ்சந் தனமுந்
தாளார் திரளச் சாளமு நீளார்
குறிஞ்சியுங் கொகுடியு முகடுயர் குன்றிற்
பறிந்துடன் வீழப் பாய்ந்து செறிந்துயர்
புதுமத கிடறிப் போர்க்கலிங் கிடந்து - - - - - - -
மொதுமொது முதுதிரை விலகி கதுமென
வன்கரை பொருதுவருபுனற் பெண்ணைத்
தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது
மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத்
தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் - - - - - -
மூரிவண் டடக்கைப் பாரித னடைக்கலப்
பெண்ணை மலயர்க் குதவிப் பெண்ணை
யலைபுன லழுவத் தந்தரி க்ஷஞ்செல
மினல்புகும் விசும்பின் வீடுபே றெண்ணிக்
கனல்புகுங் கபிலக் கல்லது புனல்வளர் - - - - - -
பேரட் டான வீரட் டானம்)
12ம் நூற்றாண்டு இலக்கியமான திருத்தொண்டர் புராணம் என கூறப்படும் பெரியபுராணம் 63 நாயன்மார்களின் வரலாற்றை கூறுகிறது. 8 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரின் திருத்தொண்டத்தொகை மூலமாய் வைத்து சேக்கிழாரால் எழுதப்பட்டது பெரியபுராணம். இதில் மலையமான்கள் ஒருசிலரைப்பற்றி குறிப்புகள் வருகிறது. எனவே இக்காலத்திய மலையமான்களை பல்லவர்காலமான கி.பி 5-8 ம் நூற்றாண்டு என கருதலாம். சங்ககாலத்திற்கு பின் இவர்களைப்பற்றி கிடைக்கும் குறிப்புகள் பெரியபுராணம் வாயிலாகவே அறிய முடிகிறது. இப்புராணத்தில் மெய்ப்பொருள் நாயன்மார் மலையமான் குடியை சேர்ந்தவராய் அறியப்படுகிறது. இவர் புராணத்தை கீழுள்ள இணைப்பில் விரிவாய் காணலாம்.
இப்புராணத்தில் மலையமானை எதிர்த்த மற்றுமொரு சிற்றரசனாய் "முத்தரசன்" என்பவரை சேக்கிழார் கூறுகிறார். இதே காலகட்டத்தில் வானகோ முத்தரசன் என்பவரின் நடுகற்கள் செங்கம் பகுதியில் கிடைக்கிறது. இவர்கள் முதலாம் நரசிம்மவர்ம பல்லவனின் ஆளுகையில் இருந்தவர்கள் இந்நடுகல் கூறுகிறது. இப்பகுதியிலிருந்த மற்றுமொரு ஆளுமைமிக்கவனாய் "மாந்தபருமன்" என்பவனை அங்குள்ள நடுகற்கள் கூறுகிறது. இவ்விருக்குடியினருக்கும் பகைமை இருந்துள்ளது. மாந்தபருமருக்கு ஆதரவாய் மலையமான் இருந்திருக்கக்கூடும். ஆகவே 'வானகோமுத்தரசர்" அடிக்கடி திருக்கோவிலூரை தாக்கியுள்ளார், இந்நிகழ்வை சேக்கிழார்,
"இன்னவா றொழுகு நாளில்
இகல்திறம் புரிந்ததோர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும்
ஆசையால் அமர்மேற் கொண்டு
பொன்னணி யோடை யானை
பொருபரி காலாள் மற்றும்
பன்முறை இழந்து தோற்றுப்
பரிபவப் பட்டுப் போனான்"
என மெய்ப்பொருள் நாயனார் புராணத்தில் 5 ம் பாடலில் கூறுகிறார். எனவே மெய்ப்பொருள் நாயன்மார் காலத்தை 7 ம் நூற்றாண்டின் இடைப்பகுதியாய் கூறலாம். தஞ்சைப் பெரியகோவிலில் இந்நாயன்மாருக்கு ராஜராஜனின் அதிகாரியான "பொய்கைநாட்டு கிழான் தென்னவன் மூவேந்த வேளான்" உலோகபடிமம் எழுப்பியதை அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. "தத்தா நமரே காண் என்ற மிலாடுடையான்" என இவ்வடியாரை கல்வெட்டில் காணலாம். மலைநாடுடையான் என்தே பிற்காலத்தில் "மிலாடுடையான்" என அழைக்கப்பட்டது.
கல்வெட்டில் மலையமான்கள்:
கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் கல்வெட்டு பொறிப்புடன் 9 ம் நூற்றாண்டின் முற்பகுதியாய் கருதத்தக்க ஒரு கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது.
" ஸ்ரீ முக்குல மலையமான் சாதன்"
என அதில் கல்வெட்டு வாசகம் உள்ளது. முக்குல மலையமான் வம்சத்தை நேர்ந்த சாதன் என்பவன் இந்த கொற்றவையை செய்து வைத்திருப்பதை இந்தக்கல்வெட்டு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
கிளியூர் பெருமான்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை வட்டத்தில், பெரியசெவலை அருகில் உள்ள ஊர் "கிளியூர்" இவ்வூரை அடையாளப்படுத்தியே "கிளியூர் மலையமான்" என பிற்கால சோழர் கல்வெட்டில் தம்மை மலையமான்கள் அழைத்துக் கொண்டனர். இம்மரபில் முதல் மலையமானாய் அறியப்படுபவர் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டில் வருகிறார்.(ARE 1927&28 No.151) கிளியூர் பெருமானார் மிலாடுடையார் கயிறூர்ப் பெருமானார், எனும் பெயருடைய அதிகாரியின் மனைவியான ராஜதேவி தேசாதக்கிய பெருமானார் என்பவர் திருக்கோவிலூர் வீரட்டானத்திற்கு 100 ஆடுகள் நிவந்தமளித்துள்ளார்.
நரசிம்மவர்மன்:
இதே காலகட்டத்தில் சத்திநாதன், சித்தவடவன்,மிலாடுடையான்,நரசிம்மவர்மன் என பல சிறப்புபெயர்களில் அழைக்கப்பட்ட மற்றொரு மலையமான் பராந்தகர் காலம் முதல் உத்தமசோழன் காலம் வரையிலும் வருகிறார். பராந்தகரின் புதல்வன் ராஜாதித்தன் இராஷ்டிரகூடரோடு நடந்த தக்கோலபோரில் இறக்க தொண்டைநாடும், நடுநாட்டில் பலபகுதியும் ராஷ்ட்ரகூடரான கன்னரதேவன் வசம் போகிறது. அச்சமயம் நரசிம்மவர்மன் கன்னரதேவனின் ஆளுகைக்குட்பட்ட அரசனாகி, திருநாமநல்லூரில் சில தானங்கள் தருகிறான். அதில்,
"ஸ்லஸ்திஸ்ரீ கன்னரதேவருக்கு யாண்டு பதினேழாவது முனைப்பாடி திருநாவலூர் திருத்தொண்டீஸ்வரத்து மகாதேவருக்கு,
ஸ்வஸ்திஸ்ரீ சுக்ரான்வய உதயாசல ஆதித்ய சக்திநாத சிம்ஹத்வஜ சிகிமகர லாஞ்சன மலைய குலோத்பவ மலையகுல சூளாமணி ஸ்ரீமத் நரசிம்ஹவர்ம மிலாடுடைய நாட்டான் சித்தவடவன்"
என கல்வெட்டில் கன்னரதேவனுக்கு அடங்கிய சிற்றரசனாக கூறிகொள்கிறான். இவனது மனைவி சேதிமாதேவியார் என்பவர் திருப்பழனம்,திருச்சோற்றுத்துறை, திருப்பூந்துருத்தி ஆகிய கோவில்களுக்கு நிவந்தம் அளித்துள்ளார்.இவரின் இயற்பெயர் "ஏகவீரன் தன்ம சங்கடியார்" என திருமலை கல்வெட்டு வாயிலாய் அறியலாம். இந்த நரசிம்மவர்மனின் மகளை உத்தமசோழன் மணந்துள்ளார்.
விக்ரமசோழ மிலாடுடையான்:
ராஜராஜசோழனின் தாய் வானவன் மாதேவியின் தந்தை இவர். இவரது மனைவி மிலாடுடையதேவி எனப்படும் 'புலிசய்யன்சாமி அப்பை" என்பவராவார். இவர் காலத்தில் படைத்தலைவர்களாக நிறைய மலையமான்கள் பெயர் வருகிறது.
உத்தமசோழ மிலாடுடையார்:
விக்ரமசோழ மிலாடுடையாருக்கு அடுத்து உத்தமசோழ மிலாடுடையார் ஆட்சிக்கு வருகிறார். பெருவீரரான இவர் ராஜேந்திரசோழனின் மருமகனாகிய ராசராசநரேந்திரனுக்கு ஆதரவாய் போர்புரிய மேலைசாளுக்கியம் சென்று "கலிதிண்டி" எனும் இடத்தில் இறக்க அவருக்கொரு பள்ளிப்படை கோவில் அங்கு எழுப்பப்பட்டது.இவரது மனைவி கணபதி மயிலாடி.
இவர் காலத்திலும் இவருக்கு பின்னர் குலோத்துங்கன் காலம் வரையிலும் சில மிலாடுடையார் வருகின்றனர். அவர்கள் பெயர்கள்:
1.அருமொழிதேவ மிலாடுடையான்
2.இராஜேந்திரசோழ மிலாடுடையான்
3.முடிகொண்ட சோழ மிலாடுடையான்
4.செம்பியன் மிலாடுடையான்
5.கங்கைகொண்ட சோழ மிலாடுடையான்
6.இரணகேசரி நரசிம்மவர்ரேன்
7.கரிகாலசோழ ஆடையூர் நாடாழ்வான்
குலோத்துங்கன் கால மலையமான்கள்:
வாணகோப்பாடி நாட்டை ஆண்ட மலையமான்கள் பிற்காலத்தில் வாணக்கோப்பாடி அரையர் எனும் பொருளில் தம்மை வாணகோவரையர் என கல்வெட்டில் பொறித்துக்கொண்டனர். இதே காலகட்டத்தில் மலையமான்களின் மற்றொரு கிளையினர் மலையமான், சேதிராயன் மிலாடுடையான் எனவும் அழைத்துக்கொண்டு ஆட்சி புரிந்தனர்.
அம்மலையமான்களின் பெயர்கள்:
1.ராஜராஜசேதிராயன்
2.ராஜேந்திர சோழ மலையமான்
3.மலையகுலராயர்
4.ராஜேந்திரசோழ சேதிராயன்
5.குலோத்துங்க சோழ சேதிராயன்
மலையமான் அதிகாரிகள்:
1.தில்லை நாயகன் தேவர்கண்டன் அகமுடையான் மலையனான இராஜேந்திர சோழ சேதிராயன்.
2.மலையமான் திருக்கலை மருந்தன் ஆழ்வானாங்ககார மலையமான்
3.வேளக்காரன் ராஜராஜ சேதிராயன்
மூன்றாம் ராஜராஜன் காலம் வரையிலும் நிறைய மலையமான்களின் பெயர்கள் கிடைக்கிறது. அதன்பின் காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் மலையகுல கோவலராயன் என்பவனின் தகவல் கிடைக்கிறது.இறுதியாக திருவண்ணாமலையில், "கூத்தாடுவானான சேதிராயன்" எனும் அதிகாரி 48 பசுக்களையும் இரண்டு எருதுகளையும் வழங்கியுள்ளான். இதுவே கல்வெட்டு ரீதியாய் மலைய்மான்களின் கடைசி கல்வெட்டாகும். அதன்பின்னர் எழுந்த விஜயநகர பேரரசில் புகழ்பெற்ற இவ்வேளிர் வம்சம் மக்களோடு மக்களாய் கலந்துவிட்டது.
நடுகல் புகைப்பட உதவி: குமரவேல் ராமசாமி
Reference :
1.மலையமான்கள்
2.நடுகல் கல்வெட்டுகள்
3.தென்னிந்திய கல்வெட்டுகள்
மலையமான் கொற்றவை
மெய் பொருள் நாயன்மார்
மலைய மான் காசுகள்